சென்னை: சென்னை ரன்னர்ஸ் சார்பில் இன்று நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். சென்னை ரன்னர்ஸ் சார்பில் மாரத்தான் ஓட்டம் இன்று அதிகாலை 5.30 மணிக்கு சென்னை பெசன்ட் நகர் மற்றும் நேப்பியர் பாலத்தில் இருந்து துவங்கியது. இந்த மாரத்தான் ஓட்டம் 10 கி.மீ, 21 கி.மீ, 32கி.மீ, மற்றும் 42 கி.மீ தொலைவுகளில் 4 பிரிவுகளாக நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த மாரத்தான் ஓட்டத்தில் ஆண்கள், பெண்கள், முதியவர்கள் என 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
12வது ஆண்டாக நடைபெறும் இந்த மாரத்தான் ஓட்டத்தை சென்னை பெசன்ட் நகரில் இருந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடியசைத்து துவக்கி வைத்தார். அதே போல நேப்பியர் பாலத்தில் முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இந்த மாரத்தான் ஓட்டத்தின் மூலம் பெறப்படும் நிதியினை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மருத்துவ செலவிற்கு பயன்படுத்தப்பட உள்ளனர். மேலும் சென்னை மாநகரம் பெண்களுக்கு பாதுகாப்பான மாநகரம் என்பதை வெளிப்படுத்தும் நோக்கில் இம்மாரத்தான் ஓட்டத்தில் 35 சதவீதம் பெண்கள் பங்கேற்றுள்ளனர். இதற்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த மாரத்தான் ஓட்டம் சாந்தோம், டி.ஜி.எஸ் தினகரன் சாலை வழியாக ஓஎம்ஆர் சாலை, இசிஆர் சாலை வழியாக முட்டுக்காடு மற்றும் உத்தண்டி வரை சென்று நிறைவடைகிறது. இதனால் சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் சிலர் பாதிக்கப்பட்டனர்.
இந்த மாரத்தான் குறித்து சென்னை ரன்னர்ஸ் இயக்குனர் செந்தில்குமார் நிருபர்களிடம் கூறுகையில், ‘இந்த போட்டி 12வது ஆண்டாக நடத்தப்படுகிறது. இதில் 20,000க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். முதல் முறையாக சனிக்கிழமை இந்த போட்டியை நடத்தி இருக்கிறோம். இதனால் சென்னை மாநகருக்கு பெருமை சேர்த்து இருக்கிறோம். இதன் மூலம் பெறப்படும் நிதியினை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மருத்துவ செலவிற்கு பயன்படுத்தப்பட உள்ளனர். இதற்கு உதவியாக இருந்த போலீசார், மாநகராட்சியினருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்’ என்றார்.
மெட்ரோ ரயில்களில் இலவச பயணம்
சென்னை மாரத்தானை முன்னிட்டு இன்று அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டது. மாரத்தான் போட்டியில் பங்கேற்பவர்களுக்கு சிறப்பு குறியீடு பயண அட்டையை பயன்படுத்தி இன்று மட்டும் கட்டணமின்றி பயணிக்கலாம். மேலும் வாகன நிறுத்துமிடத்தில் கட்டணமின்றி வாகனங்களை நிறுத்தி கொள்ளலாம்.
The post சென்னை ரன்னர்ஸ் சார்பில் சென்னையில் மாரத்தான் ஓட்டம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.